மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறும், கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை முன் கதவை பூட்டி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எவரும் உட்செல்ல விடாது போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்
குறித்த பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டுக்கு கல்வி கற்று வந்த ஆசிரியர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதேவேளை அதிபருக்கு ஆதரவாக இருக்கும் சிலரால் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த பாடங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஆசிரியர் இல்லாது இருந்து வருகின்றதுடன் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கின்றது.
இது தொடர்பாக அதிபர் மற்றும் வலயக் கல்வி பணிமனையின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை ஒரு தீர்வும் இல்லை.
இந்த நிலையில் பாடசாலை அதிபரை இடமாற்றுமாறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வலய கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடுகள் செய்திருந்தனர்.
இதற்கு இதுவரை தீர்வும் கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்து குறித்த பாடங்களுக்கான ஆசிரியர்களை வலயக்கல்வி பணிப்பாளர் நியமித்து தரும் வரைக்கும் பாடசாலை கதவை திறக்க முடியாது என மாணவர்கள் சுலோகங்கள் ஏந்தியவாறு காலை தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து குறித்த போராட்ட இடத்திற்கு தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம் செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி சென்று மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதிபர் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும்,
அங்கிருந்து பதில் வரும் வரை அவர் இன்று தொடக்கம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு தற்காலிகமாக மாற்றுவதாகவும் உத்தரவாதம் அளித்ததையடுத்து பகல் 12.00 மணிக்கு மாணவர்கள் கதவை திறந்து உட்செல்ல அனுமதித்தனர்.