தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்த பணி நிறுத்தமானது இன்றும் தொடரும் என கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் (17) ஆரம்பித்த இப் போராட்டமானது வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரையில் இப் பணி நிறுத்தம் தொடரும் எனவும் இதுதொடர்பில் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், வேலைநிறுத்தம் குறித்து தனது கருத்தை தெரிவித்த தபால் மா அதிபர் ருவன் சத்குமார, தபால் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
வேலைநிறுத்தத்தை கைவிட்டு கலந்துரையாடல் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு தபால் தொழிற்சங்கங்களை கேட்டுக்கொள்வதாகவும் ருவன் சத்குமார தெரிவித்தார்.