கிளிநொச்சியில்(Kilinochchi) ரயில் கடவையை கடக்க முயன்றவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தினால் ரயில் சேவையும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்(Colombo to Jaffna) நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொன்னளகு அனுசன்ராஜ் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த ரயில் சுமார் 30 நிமிடங்கள் வரை அப்பகுதியில் தரித்து நின்றதுடன், சடலம் உறவினர்களால் பொறுப்பேற்ற பின்னர் யாழ்.நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
பொலிசாரும் மக்களும் ரயில் ஊழியர்களுடன் பேசி, உயிரிழந்தவரின் உறவினர்களிடம் சடலத்தை கையளித்தனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள ரயில் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்கை முறையாக இயங்குவது இல்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.